இனி பள்ளி மதிய உணவில் சிறுதானிய சிற்றுண்டி : கர்நாடக முதல்வர் அறிவிப்பு..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/5d37ff491c831848a05200118677cdf7.jpg?width=836&height=470&resizemode=4)
கர்நாடக வேளாண்துறையின் சார்பில் சிறுதானிய மற்றும் இயற்கை வேளாண் சர்வதேச வணிக கண்காட்சி பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இன்று வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சியில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது,
கர்நாடக அரசு தகவல் தொழில் நுட்பத்துறை மட்டுமல்லாமல் சிறுதானிய மற்றும் இயற்கை விவசாய துறைக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. நாட்டிலே கர்நாடகா மட்டுமே சிறுதானிய கண்காட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது. நமது பாரம்பரிய சிறுதானிய விவசாயத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்ல கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.
கர்நாடக மக்கள் சிறுதானியமான கேழ்வரகை அதிகம் உட்கொள்கின்றனர். இதனால் கர்நாடக மக்களின் ஆரோக்கியமும் ஆயுட்காலமும் சிறப்பாக இருக்கிறது. குறைந்த அளவிலான நீரை வைத்தே சிறுதானிய வேளாண்மையை சிறப்பாக மேற்கொள்ள முடியும். சிறுதானியங்களை அதிகளவில் உட்கொண்டபோது மக்களுக்கு இந்த அளவுக்கு நோய்கள் வரவில்லை.
கர்நாடக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளியில் மதிய உணவில் சிறு தானிய சிற்றுண்டி வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இதே போல அரசு நடத்தும் இந்திரா கேண்டீனிலும் சிறுதானியத்தில் தயாரிக்கப்பட்ட உணவு வழங்கப்படும். இதன்மூலம் மக்கள் பயன்பெறுவதுடன், சிறுதானிய விவசாயிகளும் பயனடைவார்கள். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.