கார்கில் தாக்குதல் நடத்தியது தவறு தான் : பாக். முன்னாள் பிரதமர் ஒப்புதல்..!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக இருந்தார். பனாமா பேப்பர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
அதன்பின் இங்கிலாந்து சென்ற அவர் 4 ஆண்டுகள் கழித்து கடந்த அக்டோபர் மாதம் பாகிஸ்தான் திரும்பினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதற்கிடையே, 6 ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி தலைவராக நவாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் மேற்கொண்ட லாகூர் ஒப்பந்தத்தை மீறி கார்கில் தாக்குதல் நடத்தியது தவறுதான் என நவாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக, நவாஸ் ஷெரீப் கூறுகையில்,
1998-ம் ஆண்டு மே 28-ம் தேதி பாகிஸ்தான் 5 அணுகுண்டு சோதனைகளை நடத்தியது. அதன்பிறகு வாஜ்பாய் இங்கு வந்து எங்களுடன் ஒப்பந்தம் செய்தார். ஆனால் நாங்கள் அந்த ஒப்பந்தத்தை மீறினோம். கார்கில் மீது தாக்குதல் நடத்தியது எங்கள் தவறு தான் என தெரிவித்தார்.