கன்னடாவிற்கு நீண்ட வரலாறு இருக்கிறது... அதெல்லாம் இந்த கமலுக்கு தெரியாது - சித்தராமையா காட்டம்!

”தக் லைஃப்” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல் ஹாசன், தமிழில் இருந்து தான் கன்னட மொழி பிறந்தது என்றார். இதற்கு கர்நாடகா மாநிலத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக கன்னட அமைப்புகள் பலவும் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளன.
பெங்களூருவில் தக் லைஃப் படத்தின் வெளியீட்டை ஒட்டி போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் கன்னட மொழி குறித்த சர்ச்சை பேச்சு என்று கூறி அந்த போஸ்டர்களை கிழித்து எறிந்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதாவது, நாங்கள் கமல்ஹாசனுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். உங்கள் படம் கர்நாடகாவில் வியாபாரம் ஆக வேண்டும்.
அப்படியிருக்கையில் கன்னட மொழியை அவமதித்துள்ளீர்கள்? இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இந்த பேச்சை பேசும் போது எங்கள் மாநிலத்தில் இருந்திருந்தால் உங்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருப்போம். ஆனால் நீங்கள் தப்பித்து கொண்டீர்கள். எங்கள் மொழிக்கும், மக்களுக்கும் எதிராக பேசினால் போராட்டங்கள் வெடிக்கும். உங்கள் படம் கர்நாடகாவில் ஓடாது. தடை விதிப்போம் என்று எச்சரித்துள்ளனர்.
விஜயேந்திர எடியூரப்பா கூறுகையில், தாய்மொழியை நேசிப்பதாக நடந்து கொண்டு பெரிய ஆணவம் காட்டக் கூடாது. கலைஞர்கள் ஒவ்வொரு மொழியையும் மதித்து நடக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா சற்றுமுன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கன்னடாவிற்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. அதெல்லாம் இந்த கமல் ஹாசனுக்கு இதெல்லாம் தெரியாது என்று கூறி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்த பாஜக தலைவர் ஆர்.அசோகா பேசும் போது, மன நோயாளி என்று கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். மேலும் சிலர் சரியான தகவலை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். கன்னட மொழியின் கலாச்சார அடையாளத்தை பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்று குறிப்பிட்டார். நடிகர் கமல் ஹாசன் பேசிய தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில், கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் கலந்து கொண்டார். அவரை புகழ்ந்து பேசும் போது தான் சர்ச்சையில் சிக்கி கொண்டார். அதாவது, ராஜ்குமாரின் குடும்பம் கர்நாடகாவில் இருக்கும் என்னுடைய குடும்பம்.
அதனால் தான் இங்கு வந்திருக்கிறார். என்னுடைய பேச்சை தொடங்கும் போது “உயிரே உறவே தமிழே” என்று தொடங்கினேன். தமிழில் இருந்து பிறந்தது தான் கன்ண்ட மொழி. இதை நீங்களும் ஒத்து கொள்வீர்கள் என்று சிவராஜ்குமாரை பார்த்து கூறினார். அதற்கு கீழே அமர்ந்திருந்த சிவராஜ்குமாரும் தலை அசைத்தார். இந்த பேச்சை தான் தற்போது வைரலாக்கி சர்ச்சையாக மாறியிருக்கின்றனர். கன்னட அமைப்புகள் பலவும் சமூக வலைதளங்கள் மூலம் கமல் ஹாசனை விமர்சித்து வருகின்றனர்.