டாஸ்மாக் அருகிலேயே விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும் - கமல்ஹாசன்..!

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி விஷ சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 56 ஆக அதிகரித்துள்ளது . இந்த நிலையில் விஷ சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கமல்ஹாசன் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூறியதாவது:-
டாஸ்மாக் அருகிலேயே விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும். குடிக்காதே என்று சொல்ல முடியாது. அளவோடு குடி என்று வேண்டுமானால் சொல்லலாம். மதுக்கடைகளை இழுத்து மூட வேண்டும் என்பது தவறான கருத்து.
இதற்கு உலகத்தில் பல முன்னுதாரணங்கள் உள்ளது. வருமானம் ஈட்டும் எந்த அரசும் அதை திரும்பவும் மக்களுக்கு போய்ச் சேரும் ஒரு நற்பயனை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். விஷ சாராயம், கள்ளச்சாரயம், மது உள்ளிட்டவை ஆபத்து என்பதை மக்களின் மனதில்படும்படி எடுத்துச் சொல்லும் அறிவுரைகள் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.