#JUST IN : தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 14-ம் தேதி கூடுகிறது.! ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்படுமா?
தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 14-ம் தேதி காலை 11 மணியளவில் கூடுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் முக்கிய திட்டங்கள், தொழில் அமைப்புகளுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக இந்த கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் மேற்ககொள்ளப்படலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் தமிழக அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் முறையாக மக்களை சென்று சேர்ந்துள்ளதா எனவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் அண்மை காலங்களில் ஏராளமான கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. குறிப்பாக ஆணவக்கொலை சம்பவங்களும் நடந்து வருகின்றன. கடந்த வாரம் நெல்லையில் வைத்து கவின் குமார் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அது ஒரு ஆணவக்கொலை என்பது தெரிந்தது. கவின் குமார் நெல்லையை சேர்ந்த மற்றொரு சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் காதலித்து வந்த நிலையில், இதுபற்றி அறிந்த அந்த பெண்ணின் சகோதரர், கவின்குமாரை தனியாக சந்திக்க வேண்டும் என அழைத்துள்ளார். அதை நம்பி சென்னையில் இருந்து விடுப்பில் ஊருக்கு சென்ற கவின்குமார், நெல்லைக்கு சென்றார். அப்போது பட்டப்பகலில் கவின்குமாரை சரமாரியாக வெட்டி அவர் கொலை செய்தார். பின்னர் அந்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித், காவல் நிலயைத்தில் சரண் அடைந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் சகோதரியை காதலித்து வந்தது பிடிக்காததால், கவினை கொலை செய்தேன் என ஒப்பு கொண்டார்.
இதற்கிடையே கவின்குமாரை சுர்ஜித்தின் குடும்பத்தினர் திட்டமிட்டு படுகொலை செய்ததாக கவின்குமாரின் பெற்றோர் குற்றம்சாட்டினா். மேலும் கவினின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனா். இந்த வழக்கில் சுர்ஜித்தின் தந்தையான காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். மேலும் கவினின் காதலியிடம் சிபி சிஐடி விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அரசியல் தலைவர்கள் பலரும், ஆணவக்கொலைகளை தடுக்க தனிச்சட்டம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனா்.
இந்த நிலையில் வருகிற 14ந் தேதி கூடும் தமிழக அமைச்சரவையில் இதற்கு தனி சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் திமுக அரசு கொண்டு வந்துள்ள முதலீடுகள், புதிய ஒப்பந்தங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு நிர்வாக ஒப்புதல் அளிப்பதற்காக இந்த கூட்டம் கூட உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு திமுக அரசு தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவிப்பதும், அவற்றை அவசர அவசரமாக செயல்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றை எல்லாம் வாக்குகளாக மாற்றுவதற்கு திமுக போராடி வருகிறார்.