#JUST IN : செந்தில் பாலாஜி தம்பி வழக்கில்...நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதனை எதிர்த்து அசோக்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.ல்ட்சுமி நாராயணன் அமர்வில் இன்று (ஜூலை 15)விசாரணைக்கு வந்தது.
அப்போது அசோக்குமார் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, “மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல 14 நாட்களுக்கு மட்டும் அனுமதி அளித்தால் போதும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தயார்” என்று வாதங்களை முன்வைத்தார்.
அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் ரஜினீஷ் பத்தியால் ஆஜராகி, “அசோக்குமார் மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்..
இதனையடுத்து,பயணத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய அசோக்குமார் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் மனு குறித்து பதிலளிக்க அமலாக்கத் துறைக்கும் உத்தரவிட்டனர்.
ஒருவேளை அமெரிக்கா செல்ல அனுமதியளித்தால் பாஸ்போர்ட்டை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்கல் செய்ய நேரிடும் என்றும் தெரிவித்து வழக்கு விசாரணையை ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.