#JUST IN : ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறீத்து அவதூறாக பேசிய ரங்கராஜன் நரசிம்மனுக்கு 14 நாட்கள் சிறை..!
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர் ‘Our Temples’ (நம்முடைய கோவில்கள்) என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் மத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் ‘ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளுக்கு நடந்த அபச்சாரங்கள்’ என்ற தலைப்பில் யூடியூப் சேனலில் கடந்த வாரம் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதையடுத்து, தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு தகவல்களை பரப்பிய ஸ்ரீரங்கம் ரங்கராஜன் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ஆன்லைன் வாயிலாக ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, ஸ்ரீரங்கம் ரங்கராஜன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தனிப்படை போலீஸார் ஸ்ரீரங்கம் சென்று ரங்கராஜனை அவரது வீட்டில் கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை அழைத்து வந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறீத்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரங்கராஜன் நரசிம்மனுக்கு 14 நாட்கள் புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு..