#JUST IN : 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/49ed0742a16cd7522ca170ffaae2b70b.webp?width=836&height=470&resizemode=4)
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்கும் வகையில் வைகை அணையில் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி 15 நாட்களுக்கு 3 கட்டங்களாக தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக ராமநாதபுரம் மாவட்ட தேவைக்காக கடந்த 10-ந்தேதி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்தநிலையில் அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட தேவைக்காக கடந்த 5 நாட்களாக திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று காலை நிறுத்தப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) காலை முதல் சிவகங்கை மாவட்ட தேவைக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
அதன்படி அணையில் இருந்து இரண்டாம் கட்டமாக சிவகங்கை மாவட்ட தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று முதல் வருகிற 19-ந்தேதி வரை 4 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு 3-ம் கட்டமாக மதுரை மாவட்ட தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 50 அடியாக உள்ளது.
அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில், தண்ணீர் திறக்கப்படுவதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதன் காரணமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்கள் ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.