1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா மீது வழக்குப்பதிவு!

1

சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். டெங்கு, மலேரியா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்ககூடாது ஒழித்து கட்ட வேண்டும், அதைப்போல தான் இந்த சனாதனமும் அதை எதிர்க்க கூடாது; ஒழிக்க வேண்டும்” என்று பேசினார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு தேசிய அளவில் விவாதங்களை கிளப்பி உள்ளது. அவரது பேச்சுக்கு இந்து அமைப்புகளும், பாஜகவினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள், உதயநிதி ஸ்டாலின் மீது காவல் நிலையங்களில் புகார்களை அளித்து வருகின்றன. அதேபோல், உதயநிதிக்கு ஆதரவாகவும் பலர் களம் இறங்கியுள்ளனர். 

இந்நிலையில் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பாஜக தகவல் தொழில்நுட்பத்துறைத் தலைவர் அமித் மால்வியா மீது திருச்சி போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, “தமிழ்நாடு முதல்வரின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை மலேரியா மற்றும் டெங்குவுடன் இணைத்து பேசியுள்ளார். அதை வெறுமனே எதிர்க்கக்கூடாது ஒழிக்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். சுருக்கமாகச் சொன்னால், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் பாரதத்தின் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என அவர் அழைப்பு விடுக்கிறார்.” என அமித் மால்வியா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின், “சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களை இனப் படுகொலை செய்ய வேண்டும் என நான் ஒருபோதும் அழைப்பு விடுக்கவில்லை. சனாதன தர்மம் என்பது சாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் கொள்கை. சனாதன தர்மத்தை வேரோடு பிடுங்குவது மனித நேயத்தையும் மனித சமத்துவத்தையும் நிலைநிறுத்துவதாகும். நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் உறுதியாக நிற்கிறேன். எனக்கு வரும் சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். பொய்யான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்.” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

null


 

Trending News

Latest News

You May Like