1. Home
  2. தமிழ்நாடு

மாண்புமிகு அம்மாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்க வேண்டுமென்றே அண்ணாமலை பேட்டி கொடுக்கிறார் - ஜெயக்குமார்..!

1

முன்னாள் முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி ஜெயலலிதாவை 'இந்துத்துவா தலைவர்' என ஒற்றை மதவாதத் தலைவர் போல் சித்தரித்து அவதூறு பரப்புகிறார் அண்ணாமலை என அதிமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து ஜெயக்குமார் கூறியது, மாண்புமிகு அம்மா அவர்கள் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட மற்ற மதங்களுக்குப் பொதுவாகத் திகழ்ந்தவர். மேலும் அவர் அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவர். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நாட்டில் பல மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் தமிழ் நாட்டில் எந்தவித வன்முறைக்கும் இடம் அளிக்காமல் தமிழ் நாட்டை அமைதிப் பூங்காவாக திகழச் செய்தவர் மாண்புமிகு அம்மா.

 பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று, மாண்புமிகு அம்மா அவர்கள் மீது அவதூறு பரப்பும் நோக்கில், ஒற்றை மதவாதத்தைச் சார்ந்த தலைவர் போல காட்டுவது கண்டனத்திற்குரியது. புரட்சித்தலைவர் வழியில், "எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்- இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்ற திராவிடக் கோட்பாட்டின் அடிப்படையில் பொற்கால ஆட்சி தந்தவர் மாண்புமிகு புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா அவர்கள்.

தமது ஆட்சிக் காலத்தில் முதன்முதலாக திருக்கோயில்களில் அன்னதானத் திட்டத்தை துவக்கி வைத்ததோடு புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்கள் 2001-ம் ஆண்டு மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் துவக்கப்பட்டது. மாண்புமிகு அம்மா அவர்கள், தமது ஆட்சிக் காலத்தில் தான் கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமான, ஜெருசலம் சென்று வருவதற்கு, அரசு நிதி உதவி அளிக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்கள்.

 மாண்புமிகு அம்மா அவர்கள் தமிழ் நாடு அரசியல் உள்ளவரை அனைத்து மக்களுக்கும் பொதுவான தலைவராக திகழ்ந்தார். திரு. அண்ணாமலை அவர்கள், தனது சொந்த அரசியல் லாபத்திற்காகவும், தமிழ் நாட்டில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் மாண்புமிகு அம்மா அவர்கள் இந்து மதத்தை மட்டுமே சார்ந்தவர் என அவரது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் வேண்டுமென்றே பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்திற்குரியது என ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like