பாதுகாப்பு வளையத்துக்குள் ஜம்மு காஷ்மீர்..!

பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று ஏப்ரல் 22ம் தேதி மாலை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பல சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேரும் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உலக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், கண்டனம் தெரிவித்து அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேர சிறப்பு உதவி மையத்தை தொடங்க உத்தரவிட்டார். இது 011-24193300 மற்றும் 9289516712 என்ற எண்களில் செயல்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன, இது மேற்கு வங்க கலவரத்தில் தலைவர்கள் கைதுக்கு எதிரான பதிலடியாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த சம்பவம் நடைபெற்ற உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார், மற்றும் இராணுவம் தீவிரவாதிகளை தேடி தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
ஏற்கனவே, இந்த சம்பவத்தில் 20 பேருக்கும் மேல் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று காலை நிலவரப்படி உயிரிழப்பு எண்ணிக்கை 26-ஆக உயர்ந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் 23 இந்திய சுற்றுலாப் பயணிகள், இரண்டு உள்ளூர் மக்கள், மற்றும் ஒரு எமிரேட் மற்றும் ஒரு நேபாள நாட்டவர் அடங்குவர். பலர் படுகாயமடைந்தனர், இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 83 வயது முதியவர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த 65 வயது பெண்மணி உள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
இந்திய இராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில், பைசரான் பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பெரிய அளவிலான தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, வாகன சோதனைகள் நடைபெற்று வருகிறது.