இனி ஐபோன்களை நடுத்தர மக்கள் கனவில் கூட நினைக்க முடியாது போல...

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 20 சதவீத வரியை விதித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா கூடுதலாக 34 சதவீத வரியைச் சேர்த்தது, இது ஐபோன் விலைகளில் கடுமையான அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இந்த வரி விதிப்பு தொடர்ந்து நடைமுறையில் இருந்தால், எதிர்காலத்தில் ஐபோன் விலைகள் 2,000 அமெரிக்க டாலருக்கு மேல் (இந்திய மதிப்பில் ரூ.1.71,731) உயரக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன.
அறிக்கைகளின்படி, ஐபோன் 16 இன் அடிப்படை மாடலின் விலை தற்போது அமெரிக்காவில் 799 டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.68,590) உள்ளது. ஆனால் இது 43 சதவீதம் வரை விலை அதிகரித்து 1,142 டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.98,050) ஆக உயரக்கூடும். மேலும் தற்போது 1,599 டாலர்களுக்கு (ரூ.1,37.297) விற்கப்படும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் சுமார் 2,300 டாலர்களாக (ரூ.1,97,502) உயரக்கூடும்.
டொனால்ட் டிரம்ப் தனது முந்தைய பதவிக் காலத்திலும் சீனா மீது வரிகளை விதித்தார். ஆனால் அந்த நேரத்தில் ஆப்பிள் ஐபோன்களுக்கு சில நிவாரணங்களை வழங்கத் தேர்ந்தெடுத்தார். ஆனால் இந்த முறை வரி விதிப்பில் ஐபோன்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை. புதிய வரி விதிப்பால் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் விலைகளை உயர்த்த வேண்டியிருக்கலாம். விலைகளை உயர்த்த வேண்டாம் என்று அவர்கள் முடிவு செய்தால், அதிகரித்த செலவுகள் நிறுவனத்தின் மீதே விழும். மேலும் கட்டணங்களின் விளைவாக உற்பத்தி செலவுகள் 43% உயரக்கூடும்.
ஆப்பிள் நிறுவனம் சீனாவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் ஐபோன்களை உற்பத்தி செய்கிறது. புதிய வரிகள் அமலில் இருப்பதால், அமெரிக்காவில் ஐபோன்களுக்கான விலைகள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப்பின் வரி அறிவிப்புக்கு முன்னதாக, சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் சேமித்து வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் சந்தையில் ஐபோன்களின் விலை உடனடியாக உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.