ஆன்லைன் வரனால் விபரீதம்..! 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான மும்பை பெண்..!

நவி மும்பையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகிறார். அவருக்கான திருமண வரன் பார்க்கும் யோசனையில், முன்னணி மேட்ரிமோனியல் தளத்தில் அவரது குடும்பத்தினர் வரன்களை பரிசீலித்தனர். அப்போது சிங்கப்பூர் வாழ் இந்தியர் ஒருவரின் தொடர்பு கிடைத்தது.
பெரிய இடத்து வரன் என்ற கணிப்பில் அந்த நபருடன் தொடர்பு கொண்டார்கள். மேற்படி சிங்கப்பூர் மாப்பிள்ளை மும்பை இளம்பெண்ணை தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு பேச ஆரம்பித்தார். திருமண ஏற்பாட்டுக்கும் ஒப்புக்கொண்டார். பிசினஸ் இலக்குகள் காரணமாக சில மாதங்கள் கழித்து திருமணம் என தள்ளிப்போட்டார்.
அத்தனையையும் அந்த இளம்பெண் நம்பினார். சிங்கப்பூர் வரன் மும்பை வந்தபோது அவரது அழைப்பின்பேரில் நேரில் சந்தித்தார். அங்கே திருமண ஆசைகாட்டி இளம்பெண் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி இருக்கிறார். இப்படி ஒருமுறை இருமுறையல்ல, 2020 டிசம்பரில் தொடங்கி 2023 மார்ச் வரை தொடர்ச்சியாக வற்புறுத்தி உறவு கொள்ளப்பட்டிருக்கிறார்.
இதற்காக மும்பையில் மட்டுமன்றி சிங்கப்பூருக்கு வரவழைத்தும் பெண்ணோடு உல்லாசம் கண்டிருக்கிறார். இடையில் மும்பை பெண்ணுக்கு சந்தேகம் அதிகரித்தும் உஷாராகி நழுவ ஆரம்பித்திருக்கிறார். அப்போதுதான் அந்த ஆண் குறித்தான அழுத்தமான தகவல் ஏதும் தன்னிடம் இல்லை என்பதை பெண் உணர்ந்தார்.
அதே வேளையில் தனது அந்தரங்க படங்கள் வீடியோக்கள் என தான் சூழ்ச்சி வலையில் சிக்கி இருப்பதும் அவருக்கு புரிந்தது. இப்போது மும்பை காவல்துறையில் வழக்கு பதிவு செய்து, சிங்கப்பூர் மாப்பிள்ளையை தேடி வருகிறார். மேற்படி மாப்பிள்ளை மேட்ரிமோனியல் தளங்கள் வாயிலாக, பெண்களை வீழ்த்தி அனுபவிப்பதையே வேலையாக வைத்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது.