ஊழல் கூட்டணிக்காரர்கள் எங்கள் கூட்டணியை பற்றி பேசுவது சிரிப்பாக இருக்கிறது - நிர்மலா சீதாராமன்..!

சென்னை, அண்ணா நகரில் உள்ள சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள், கடந்த ஆண்டு நடந்த மத்திய, மாநில அரசு பணியாளர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கலந்து கொண்டார்.
பின், அவர் அளித்த பேட்டி:
சிவில் சர்வீசுக்கான தேர்வு பயிற்சி மையங்கள் அதிகமாக உள்ளன. தமிழக இளைஞர்கள் அரசு துறையில் வேலைக்கு வருவதற்கு, இது நல்ல வாய்ப்பு.
சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்தில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு, 'ஆல் பாஸ்' சலுகை வழங்கக் கூடாது என சொல்லி இருப்பது, எதிர்காலத்தில் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தகுதியான மாணவர்களை உருவாக்கும் நோக்கம் தான்.
எதையும் குறையாக பார்க்கும், தி.மு.க.,வுக்கு இதுவும் அப்படித்தான் தெரியும். மத்திய அரசு எதைச் செய்தாலும், மக்கள் நோக்கம் தான் பிரதானமாக இருக்கும்.
தமிழ் மக்களின் பங்களிப்பு இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும்.
ஜி.எஸ்.டி., வரி பற்றி, நான் தனிநபராக முடிவெடுப்பதில்லை. அனைத்து மாநில அமைச்சர்களுடன் பேசித்தான் முடிவெடுக்கப்படுகிறது.
ஆனால், 'மோடி வரி போட்டு விட்டார்' என, சொல்கின்றனர். 2017க்கு முன்வரை, 'வாட்' உள்ளிட்ட பல வரிகள் இருந்தன. அனைத்தையும் இணைத்து தான் ஜி.எஸ்.டி., வரி உருவாக்கப்பட்டது.
இதனால், ஏழை மக்களுக்கு பாதிப்பு என்ற வாதம் தவறு. ஜி.எஸ்.டி., வந்த பின்தான், வரி விகிதம் குறைந்துள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான அனுமதியை தந்துள்ளோம்.
அப்படியெனில், தி.மு.க., இனி ஜாதியை பற்றி பேசவே கூடாது. அரசியல் ரீதியாக லாபம் தேட முயற்சிக்கக் கூடாது. தாங்கள் போராடியதால் தான் கிடைத்தது என, சொல்ல வேண்டாம்.
ஜாதி பெயருடன் அழைக்கும் நடைமுறை, தமிழகத்தில் இன்றும் உள்ளது. ஜாதி பெயரை சொல்லி, குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கொட்டியதும் தமிழகத்தில் தான். தமிழகத்திற்கு எந்த பணமும் தரவில்லை என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைக்கின்றனர். 100 நாள் வேலை திட்டத்திற்கான பணத்தை தந்துள்ளோம்.
அதற்கு தி.மு.க.,வினர் சிலர், எஸ்.எம்.எஸ்., வாயிலாக நன்றி தெரிவித்துள்ளனர். சிலருக்கு பாராட்ட மனமில்லை; அதனால் அவதுாறு கிளப்புகின்றனர்.
கல்வியின் தரத்தை பற்றி, அனைத்து மாநிலங்களும் யோசிக்க வேண்டும். அமைச்சராக இருந்த ஒருவரை, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதால், பதவி விலக வேண்டிய நிர்பந்தம் தி.மு.க., கூட்டணிக்குத்தான் ஏற்பட்டுள்ளது.
தி.மு.க., அமைச்சர்கள் தான் பதவியில் இருந்து விலக்கப்படுகின்றனர். ஊழல் கூட்டணியான தி.மு.க., கூட்டணி, எங்களைப் பற்றி பேசுவது சிரிப்பாக இருக்கிறது. 'கார்ப்பரேட்' நிறுவனங்களுக்கு மட்டும் வரிச்சலுகை தரப்படுவதாக கூறும் புகாருக்கு, எவ்வித ஆதாரமும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.