1. Home
  2. தமிழ்நாடு

இதுதான் திராவிட மாடலா? - கடுகடுத்த சீமான்..!

1

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், இரண்டு இடங்களுக்கும் கருணாநிதியின் பெயரைச் சூட்ட திமுக அரசு முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் புதிதாகத் திறக்கும் டாஸ்மாக் கடைகளைத் தவிர, மற்ற அனைத்து முதன்மை அரசு கட்டிடங்களுக்கும் கருணாநிதி பெயரைச் சூட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளதாக கண்டனம் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் தமிழ்ப்பெரும் தலைவர்களுக்கு சில இடங்களில் மட்டும் உள்ள அடையாளங்களையும் அழிக்கும் வகையில், பராமரிப்பு என்ற பெயரில் கட்டிடங்களுக்கு ஏற்கனவே இருக்கும் தலைவர்களின் பெயரை மாற்றி கருணாநிதி பெயரில் திறப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா என்று சீமான் கேள்வி எழுப்பினார்.


பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகில் நாராயணசாமி நாயுடு சிலையை அகற்றி, அங்கு கருணாநிதி சிலையை நிறுவ முயன்ற செயலை நான் கண்டித்த பின்னர் அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்று திமுக அரசு பின் வாங்கியது. அதேபோன்று திருவள்ளூர் நகரில் காமராசர் காய்கறி சந்தையின் பெயரை மாற்றி கருணாநிதியின் பெயரைச் சூட்டும் முடிவையும் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்ட பிறகு மீண்டும் பெருந்தலைவர் பெயரே சூட்டப்பட்டது என்றும் சுட்டிக்காட்டினார்.

கடந்த 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆட்சியில் தமிழ்த் தலைவர்களின் புகழை மூடி மறைத்து வருகின்றன என்பது வேதனையானது என்ற சீமான், தலைவர்களின் பெயரில் ஏற்கனவே உள்ள சிறுசிறு அடையாளங்களையும் அழிக்க தற்போது திமுக அரசு முயல்வது ஏற்க முடியாதது என்றும் கூறினார்.

ஆகவே, மன்னார்குடியில் உள்ள காமராசர் பேருந்து நிலையம் மற்றும் ஆடுதுறையில் காயிதே மில்லத் பேருந்து நிலைய அங்காடி ஆகியவற்றின் பெயரை மாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் எனவும் சீமான் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Trending News

Latest News

You May Like