இது தான் விடியல் ஆட்சியா ? மளிகை பொருட்களின் விலை 40% அதிகரிப்பு.. மின் கட்டணம் 52% அதிகரிப்பு..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/16bc26b0cb712cfe506f9e75ecdf8079.webp?width=836&height=470&resizemode=4)
மக்களவை தேர்தல் பரப்புரைகள் தமிழ்நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கரூர் தோரணக்கல்பட்டியில் அதிமுக சார்பில் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கரூர் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ். தங்கவேலை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார். பின்னர் அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
”திமுகவை சேர்ந்தவர்களே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டால் எப்படி போதைப்பொருள் கடத்தலை தடுக்க முடியும். தமிழகத்தில் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக இருப்பதற்கு திமுக தான் காரணம். அதிமுக ஆட்சியில் விலை வாசிகள் கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. மளிகை பொருட்களின் விலை 40% அதிகரித்துவிட்டது. மின் கட்டணம் 52% அதிகரித்துவிட்டது. கரூரில் முக்கிய தொழிலான ஜவுளி, வேளாண்மை மற்றும் லாரிகளுக்கு பாடி கட்டும் தொழில் நலிவடைந்ததற்கு முக்கிய காரணம் திமுக அரசின் நிர்வாக சீர்கேடுகள். தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெறுவதால், மாநிலம் வளர்ச்சியில் பின்னோக்கி செல்கிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு தான்.
அதிமுக தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தால் தான் ரூ.1,000 உரிமைத் தொகையை திமுக அரசு வழங்குகிறது.கரூரில் செந்தில் பாலாஜியின் பினாமிகள் 3,000 பார்களில் கள்ள மது விற்றனர். ஆயுட்காலம் வரை சிறையில் இருக்கும் அளவுக்கு ஊழல் செய்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல யாராலும் அதிமுகவை அழிக்க முடியாது”, இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பேசினார்.