ஸ்டாலின் திட்டத்தை பின்பற்றுகிறதா பாஜக ?

சத்தீஸ்கரில் 20 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7 ஆம் தேதியும் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு நவம்பர் 17-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சத்தீஸ்கரில் உள்ள பாஜகவின் மாநில தலைமை அலுவலகத்தில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். அதன்படி, “சத்தீஸ்கரில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் ஆண்டுக்கு ரூ.12,000 தருவோம். நெல் ஒரு குவிண்டால் ரூ.3,100க்கு கொள்முதல் செய்வோம். 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு தருவோம். கல்லூரி மாணவர்கள் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம். சத்தீஸ்கர் மாநிலத்தின் ஏழை மக்கள் ராம ஜன்ம பூமிக்கு பயணம் செய்ய ராம்லல்லா யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, “வரும் 5 ஆண்டுகளில் சத்தீஸ்கரை முழு வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றுவோம் என்று இங்குள்ள மக்களுக்கு உறுதியளிக்கிறேன். இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவோம். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 18 லட்சம் வீடுகளை உருவாக்குவோம், சத்தீஸ்கரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான தண்ணீர் குழாய் மூலம் சென்றடையும். நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாய் உதவி. பாஜக ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். காங்கிரஸ் ஆட்சியில், மத மாற்றம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் விருப்பப்படி நடக்க அரசியலமைப்புச் சட்டம் சுதந்திரம் அளித்துள்ளது. ஆனால், அரசு எந்திரத்தை பயன்படுத்தி ஏழை பழங்குடியினரை மதமாற்றம் செய்யத் தொடங்கியுள்ளனர், இது அரசின் நலனுக்கு உகந்ததல்ல. இதன்காரணமாக மாநிலத்தில் கலவரம் வெடித்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது” என்றார்.