பாஸ்மதி அரிசி விலை உயர்வு என்பது உண்மையா ?
பாஸ்மதி அரிசிரகம் 1509 மற்றும் 1718 ஆகியவற்றின் விலை கடந்த மார்ச் மாதத்தில் இருந்து விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. முன்னதாக செப்டம்பர் 2024ல் 1509 ரக பாஸ்மதி அரிசி ஒரு கிலோ விலை 62 ரூபாயாக இருந்தது. அதன்பிறகு அறுவடை காலம் வந்ததால் விளைச்சல் அமோகமாக நடைபெற்றது. எனவே விலை 52 ரூபாயாக குறைந்தது.
இதையடுத்து மார்ச் மாதம் ஒரு கிலோ 58 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த சூழலில் இந்தியா - பாகிஸ்தான் இடையில் ராணுவ மோதல் தொடங்கி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இது வட இந்திய மாநிலங்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதலாக பார்க்கப்படுகிறது. எனவே அங்கு உற்பத்தி செய்யப்படும் பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் சிக்கல் வருமோ? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில் தான் பாஸ்மதி அரிசி விலை உயர்வை இந்தியா - பாகிஸ்தான் மோதலுடன் தொடர்புபடுத்தி செய்திகளை பரப்பி வருகின்றனர். இதுதொடர்பாக அனைத்திந்திய அரிசு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சதிஷ் கோயல் பேசுகையில், எல்லையில் நடைபெறும் சண்டைக்கும் பாஸ்மதி அரிசி விலை உயர்விற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.எல்லையில் நடந்து வரும் சண்டையால் பாஸ்மதி அரிசி ஏற்றுமதியானது இதுவரை பாதிக்கப்படவில்லை. எல்லாம் சமூகமாக சென்று கொண்டிருக்கிறது என்றார்.