IPL: கொல்கத்தாவை பந்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி.. மீண்டும் முதலிடத்திற்கு சென்றது !

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் அப்பொறுப்பில் இருந்து விலகினார். இதனால் மோர்கன் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தினார்.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர்கள் தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் அடுத்தடுத்து வீரர்கள் வெளியேறியதால் 20 ஓவர்கள் முடிவில் 148 ரன்கள் மட்டுமே கொல்கத்தா அணி எடுத்தது. பேட் கம்மின்ஸ் 53 ரன்களும், மோர்கன் 39 ரன்களும் அடித்தனர்.
அதிலும் கடைசி 2 ஓவர்களில் தான் சிக்ஸர்கள் பறந்தது. கம்மின்ஸ், மோர்கன் இறுதி நேர அதிரடியால் ஓரளவுக்கு கவுரமான ஸ்கோர் பெறமுடிந்தது.
பின்னர் 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, குயின்டான் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
தொடக்கம் முதலே டி காக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ரன்ரேட் சீரான வேகத்தில் வேகத்தில் உயர்ந்தது. அதிலும் விக்கெட் இழப்பின்றி. இந்த ஜோடியை பிரிக்க கொல்கத்தா அணி வீரர்கள் கடுமையாக போராடியும் அது 10.3 ஓவரிலே நடந்தது. 94 ரன்கள் எடுத்திருக்கும்போது ரோகித் சர்மா 36 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 10 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். மறுபக்கம் டி காக் 25 பந்தில் அரைசதம் கடந்தார். 3-வது விக்கெட்டுக்கு டி காக் உடன் சேர்ந்து ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பின்னர் மும்பை இந்தியன்ஸ் 16.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டி காக் 44 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 78 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 11 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு சென்றது. கொல்கத்தா அணி 4ஆவது இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.
newstm.in