போதையில் தகராறு.. இளைஞரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய நண்பர்கள் !
![போதையில் தகராறு.. இளைஞரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய நண்பர்கள் !](https://newstm.in/static/c1e/client/106785/migrated/6b58e4441e6256cdc3fb19cdd1d802e5.webp?width=836&height=470&resizemode=4)
கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே உள்ள சாத்தமாம்பட்டு கிராமத்தில் பஞ்சன் என்பவர் வசித்து வந்தார். கடந்த 18ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் அவரை பல இடங்களில் தேடினர்.
இந்நிலையில் பங்சன் சாத்தமாம்பட்டு பகுதியில் உள்ள முந்திரி தோப்பில், தூக்கில் சடலமாக தொங்கியது உறவினர்களுக்கு தெரியவந்தது. இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் போலீசாரும் அங்கு விரைந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணையை தொடங்கினர்.
அப்போது, பஞ்சன் காணாமல் போன தினத்தன்று அவரது நண்பர் சசிகுமார் தான் அழைத்துச்சென்றது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் தேடியபோது, சசிகுமார் தலைமறைவானது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதனால் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், குறிஞ்சிப்பாடி அருகே பதுங்கியிருந்த சசிகுமாரையும், உடன் தங்கியிருந்த ஜெயபிரகாஷ், நந்தகோபால் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பகீர் தகவல் வெளியானது. அதாவது மூன்று பேரும் சேர்ந்து பஞ்சனை அடித்து கொலை செய்ததை அவர்கள் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.
நெருங்கிய நண்பர்களான பஞ்சனும், சசிக்குமாரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். அவ்வாறு சம்பவதன்று மதுஅருந்தும் போது ஏற்பட்ட தகராறில் மூன்று பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், பஞ்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசாரிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக, பஞ்சன் தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்தது போல செட்டப் செய்துவிட்டு தப்பியோடினர். அதன் பின்னர் சிக்கிக்கொண்டதாக அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
newstm.in