கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் பரபர பேட்டி..!
கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது புரிய வேண்டியவர்களுக்குப் புரிய வேண்டும் என்றும் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறியதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு. மறப்போம் மன்னிப்போம் என பேரறிஞர் அண்ணாவின் எழுத்துகளை இன்று நினைவூட்ட விரும்புகிறேன். இவரது பெயரால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எம்.ஜி.ஆர் உருவாக்கினார். இதை ஜெயலலிதா கட்டி காத்தார். என்னை பொறுத்தவரையில் புரட்சி தலைவர், புரட்சி தலைவி ஆகியோரின் கனவாக இன்னும் 100 ஆண்டுகாலம் இந்த இயக்கம் ஆட்சி கட்டிலில் அமர வேண்டும். இதையொட்டியே அன்றைய தினம் நான் மனம் திறந்து பேசினேன்.
இந்த கருத்தை எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் பெரிதும் வரவேற்றுள்ளனர். என்னுடைய நோக்கம் இயக்கம் ஒன்றுபட வேண்டும். புரட்சி தலைவர், புரட்சி தலைவியின் ஆட்சி மலர வேண்டும் என்று தான் கடந்த 5ஆம் தேதி என் கருத்தை வெளிப்படுத்தினேன். தொண்டர்கள், பொதுமக்களின் எதிர்பார்ப்பை புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்க நான் கடமைப்பட்டுள்ளேன். நம் இயக்கம் வலிமை பெறுவதற்கு, 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
.png)