இன்று சர்வதேச யோகா தினம் : ஸ்ரீநகரில் பிரதமர் மோடி பங்கேற்பு..!
இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறையான யோகாசனத்தின் நன்மைகள் மற்றும் அதன் முக்கியத்துவத்தை மக்களிடையே பரப்புவதற்காக ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச யோகா தினம் உலகளவில் கொண்டாடப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்மொழிந்த போது, யோகா மீது உலகின் பார்வை பதிந்தது.
இந்த முன்மொழிவைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் என்று ஐ.நா. அறிவித்து, 2015-ம் ஆண்டு முதல் யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் 10-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. யோகா வல்லுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த நாளில் மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்க உதவுகிறார்கள். இந்த நாளில், மக்கள் ஒரே இடத்தில் கூடி யோகா பயிற்சி செய்கின்றனர்.
அவ்வகையில் ஸ்ரீநகரில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். தால் ஏரிக்கரையில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறும் பிரம்மாண்டமான நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள், மாணவர்கள், விளையாட்டு பிரபலங்கள், யோகா ஆர்வலர்கள், உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கானோர் பிரதமருடன் இணைந்து யோகாசனம் செய்ய உள்ளனர்.
யோகா தினத்தையொட்டி யோகா தொடர்பான விழிப்புணர்வு தகவல்கள் மற்றும் வீடியோக்களை பலரும் வெளியிட்டுள்ளனர்.