1. Home
  2. தமிழ்நாடு

இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் : புதிய சலுகைகள் வெளியாக வாய்ப்பு..!

1

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடக்கும் கடைசி பாராளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. பொதுவாக, பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாள் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவார். அடுத்த நாள் நிதி மந்திரி பட்ஜெட்டை தாக்கல் செய்வார். அந்த வகையில், நேற்று இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றினார். சம்பிரதாயப்படி இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவேண்டும். ஆனால், தேர்தல் நடக்க இருப்பதால் அவரால் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. இந்த நிதி ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடையும் சூழ்நிலையில், அடுத்த 3 மாதங்களுக்கான அரசு செலவுகளுக்கு நிதி ஒதுக்கும் வகையில் இடைக்கால பட்ஜெட்டைத்தான் தாக்கல் செய்ய முடியும்.

அந்த வகையில், இந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம் அவர் வரலாறு படைக்கிறார். தொடர்ந்து அவர் தாக்கல் செய்யப்போகும் 6-வது பட்ஜெட் இது. இதுவரை தொடர்ந்து 6 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தது முன்னாள் பிரதமரான மொரார்ஜி தேசாய்தான். அவரது சாதனையை இப்போது நிர்மலா சீதாராமன் சமன் செய்ய உள்ளார். 

2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 2-வது முறையாக பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராகக் கொண்டு ஆட்சி அமைத்தபோது, நிதி அமைச்சர் பொறுப்பை நிர்மலா சீதாராமன் ஏற்றுக்கொண்டார். அந்த ஆண்டு ஜூலை மாதம் தன் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது முதல் ஆண்டுதோறும் பட்ஜெட்டை தாக்கல் செய்து, இந்த ஆண்டு இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து ஒரு சாதனை படைக்க உள்ளார்.

பொதுவாக இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அளவில் எந்த அறிவிப்பும் இருக்காது. அரசின் மிகை செலவுக்கான நிதிநிலை அறிக்கையாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், தேர்தலை சந்திக்கப்போகிற சூழ்நிலையில், இடைக்கால பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள், சலுகைகள் வெளியிடப்பட்ட முன்னுதாரணமும் இருக்கிறது. இந்த இடைக்கால பட்ஜெட்டிலும் நல்ல அறிவிப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது.

இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் என்பதால், பொருளாதார ஆய்வு அறிக்கை வாசிக்கப்படவில்லை. அடுத்த மாதம் 9ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் (10 நாட்கள்) நடைபெறும் என்பதால், லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு இடைக்கால பட்ஜெட்டில் சலுகை அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், நெல் விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் (மூன்று தவணைகளில்) முதலீட்டு உதவியை வழங்குகிறது.

அந்த தொகை ரூ.9 ஆயிரமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உர மானியம் மற்றும் பயிர் காப்பீடு விவகாரத்தில் விவசாயிகளுக்கு சாதகமான அறிவிப்புகள் வெளியாகும். ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் காசா நெருக்கடி காரணமாக, கச்சா எண்ணெய் சர்வதேச அளவில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், இந்தியாவின் வளர்ச்சி நம்பிக்கையுடன் உள்ளது. 2023-24 நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7-7.3 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. 2047ல் வளர்ந்த நாடாகவும், 2025ல் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக வளரவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரயில்வேயில் மூலதனச் செலவு குறையாமல் இருக்க, அந்தத் துறைக்கு ரூ.2.8-3 லட்சம் கோடி வரை ஒதுக்கலாம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஃபிண்டெக், மின்சார வாகனங்கள், சுகாதார சேவைகள்-காப்பீடு, உயிரித் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற துறைகளுக்கு அதிக சலுகைகள் அறிவிக்கப்படலாம். கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசின் மூலதனச் செலவு கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. நாட்டில் உள்கட்டமைப்பு வளர்ச்சி வேகம் பெற்றுள்ளது. நாட்டின் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.9 சதவீதமாக உள்ளது. 2025-26க்குள் அதை 4.5 சதவீதமாக குறைக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது’ என்று தெரிவித்தன.

Trending News

Latest News

You May Like