பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கிரிமினல்களாக முத்திரை குத்துவதை விடுத்து...
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/1108b53df1a3ac1f8410d0abc1380d4d.jpg?width=836&height=470&resizemode=4)
சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்கி, சாகசங்களில் ஈடுபட்டு, மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முகமது ஆசிக், முகமது சாதிக் ஆகிய இருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, சென்னையில் முக்கிய சாலைகளில் பைக் சாகசங்களை தடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகளையும், பள்ளி – கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் பட்டியலிட்டு காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, “பொறுப்பற்ற முறையில் இருசக்கர வாகனங்களை ஓட்டும் இளைஞர்களை கிரிமினல்களாக முத்திரை குத்துவதை விடுத்து, பைக் சாகசங்களால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், இந்த இளைஞர்கள் பைக் சாகசங்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில் அவர்களை சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி, எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்குகளை கையாள்வதற்கு தேவையான நடைமுறையை உருவாக்க வேண்டும் எனக் கூறி, விசாரணையை ஏப்ரல் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.