இந்தியா - பாக் போர் பதற்றம் : டொனால்ட் டிரம்ப் விருப்பம் இதுதான்..!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் போர் தொடங்கும் நிலை உள்ளது.
இந்த போரில் இதுவரை பாகிஸ்தானுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த இந்தியா பாகிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சி செய்வதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே அவரின் விருப்பம் என கூறப்பட்டது.
இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மத்தியஸ்தம் செய்வதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் குறித்து, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், "இது வெளியுறவுத்துறை செயலாளரும் இப்போது நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மார்கோ ரூபியோவும் ஈடுபட்டுள்ள ஒரு விஷயம் ஆகும். இந்த மோதலை விரைவில் தணிக்க விரும்புவதாக அதிபர் தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் இருப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இந்த இரண்டு நாடுகளும் பல தசாப்தங்களாக ஒன்றுக்கொன்று முரண்பட்டுள்ளன என்பதை அவர் புரிந்துகொள்கிறார். இருப்பினும், அவர் இரு நாடுகளின் தலைவர்களுடனும் நல்ல உறவைக் கொண்டுள்ளார். வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இரு நாடுகளின் தலைவர்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கிறார்" என கூறப்பட்டது.
ஏற்கனவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்துவதாக கூறி இருந்தார். அதற்காக பேச்சுவார்த்தைகளும் மேற்கொண்டார். இறுதியில் ரஷ்யா 3 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு சம்மதித்தது. இதற்கு பின்னால் ரஷ்யாவின் வெற்றி விழா கொண்டாட்டம் இருந்தது. இந்த நிலையில் தான் தற்போது இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினையை முடித்து கொடுக்க டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தொடக்கத்தில் இருநாடுகளுக்கு பேசி தீர்த்து கொள்ளும்படி கூறி வந்தார். பின்னர் பயங்கரவாதத்திற்கு எதிராகவும், இந்தியாவுக்கு ஆதரவாகவும் பேசி இருந்தார். அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம்.