முதலாவது டி20 போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி..!

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி நேற்று (ஜூலை 9) முதல் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக மூன்று டி20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த தொடரில் முதலாவதாக டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷதி ராணி, ஷமிமா சுல்தானா ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஷதி ராணி 22 ரன்னும், ஷமிமா சுல்தானா 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய சோபனா மோஸ்தரி 23 ரன்னில் வெளியேற, அதனைத் தொடர்ந்து வந்த நிகர் சுல்தானா 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் வங்கதேச பெண்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் பூஜா வஸ்த்ரகர், மின்னு மணி, ஷபாலி வர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் எடுத்தனர்.
பின்னர் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பெண்கள் அணி ஆடியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக களம் இறங்கிய ஷபாலி வர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம் இறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 11 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இதில் மந்தனா 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து ஹர்மன்ப்ரீத் கவுருடன் யாஷ்டிகா பாதியா இணைந்தார். இறுதியில் இந்திய பெண்கள் அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 118 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 54 ரன்கள் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி வரும் 11ம் தேதி நடைபெறுகிறது.