இன்டியா கூட்டணியின் இடங்கள் 234 ஆக உயர்வு..!மேலும் ஒரு எம்.பி. ஆதரவு

பாரளுமன்ற மக்களவைத் தேர்தலில் இன்டியா கூட்டணி 233 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்திருக்கும் நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா தொகுதியில், பாரத் ஆதிவாசி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ராஜ்குமார் ரோட், தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலின்போது, தனக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் கட்சிக்கு நன்றியும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களிலும், 2014 மக்களவைத் தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை 99 இடங்களில் அதன் வெற்றி உறுதியானது. மேலும், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இன்டியா கூட்டணி 233 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது. தற்போது ராஜ்குமார் ஆதரவு அளித்திருப்பதன் மூலம் இன்டியா கூட்டணி இடங்கள் 234 ஆக அதிகரித்துள்ளது.
பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் தெற்கு ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பாரத் ஆதிவாதி கட்சியைச் சேர்ந்தவர் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குள் நுழைந்திருப்பது, மிகப்பெரிய வெற்றியாக அப்பகுதி மக்களால் பார்க்கப்படுகிறது. ராஜ்குமார் 2,47,054 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார். இந்த தொகுதியில் போட்டியிட்ட முதுபெரும் பழங்குடியின தலைவரும், முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவருமான மகேந்திரஜித் சிங் மால்வியாவை தோற்கடித்திருக்கிறார் ராஜ்குமார்.
இரண்டு முறை எம்எல்ஏவான ராஜ்குமார், பழங்குடியினரின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்வார் என்று அம்மக்களால் நம்பப்படுகிறது. ராஜஸ்தான், ஹரியாணா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இன்டியா கூட்டணி கணிசமான வெற்றியைப் பதிவு செய்திருக்கும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மேலும் ஒரு தொகுதி இன்டியா கூட்டணி பக்கம் வந்துள்ளது.