1. Home
  2. தமிழ்நாடு

4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்!

1

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரை இறுதிச் சுற்று ஆட்டத்தில், உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, 19-வது இடத்தில் உள்ள ஜப்பானை சந்தித்தது.

Hockey

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி பெற்று ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதே போல் நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான தென்கொரியா அணியுடன், மலேசியா அணி மோதியது. இதில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய மலேசியா அணி 6-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதையடுத்து நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - மலேசியா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் 1-1 என்ற கோல் கணக்கில் இந்தியா - மலேசியா அணிகள் சமனில் இருந்தன. தொடர்ந்து நடைபெற்ற 2-வது சுற்றின் முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியா அணி முன்னிலை பெற்றிருந்தது.

Hockey

2 கோல்கள் பின் தங்கியிருந்தநிலையில் அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து 3-3 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்து அசத்தியது. தொடர்ந்து பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 4-வது முறையாக ஆசிய சாம்பியன் ஆக்கி கோப்பையை வென்று இந்திய அணி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like