தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் முந்திச் செல்லும் போட்டியில்... பேருந்து கவிழ்ந்து விபத்து..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/366bb33f35ed9bc825390d1691575dbb.jpeg?width=836&height=470&resizemode=4)
கேரளாவில் கோழிக்கோட்டில் இருந்து பாலக்காடு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே வழித்தடத்தில் தனியார் பேருந்தும் ஒன்றும் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது இரு பேருந்துக்கும் இடையே முந்தி செல்வது தொடர்பான போட்டி ஏற்பட்டுள்ளது. பாலக்காடு கொண்டட்டி பகுதியில் முன்னாள் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை அரசு பேருந்து முந்தி செல்ல முயன்றுள்ளது.
அப்போது தனியார் பேருந்து ஓட்டுநர் வழி விடாததால் முந்தி செல்ல முயன்ற கேரளா அரசு பேருந்து திடீரென சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த டிவைடரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அரசு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் விபத்துக்குள்ளான அரசு பேருந்தை அகற்றிவிட்டு வாகன போக்குவரத்தை சரி செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில் வழக்கமாக அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு இடையே முந்தி செல்வது தொடர்பான போட்டி தொடர்ந்து நடந்துக் கொண்டு தான் உள்ளது. இதனால் பயணிகள் அச்சத்தோடு சாலையில் பயணித்து வருகின்றனர். இதனால் பிற வாகனங்களை ஓட்டுபவர்களும் அச்சத்தில் உள்ளனர்.
இதனால் அதிகளவு விபத்துகள் ஏற்படுகின்றனர். பல விபத்துக்கள் நிகழ்ந்த போதிலும் அரசு தரப்பில் இதை கண்டு கொள்ளவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் முந்தி செல்லும் போட்டியில் அரசு பேருந்து விபத்துக்குள்ளனதால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.