மக்களவையில் இன்று எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதம்: ராகுல் காந்தி தொடக்கி வைக்கிறார்..!
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே, எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகள் முடங்கின. இதனைத் தொடர்ந்து, டிச. 9 ஆம் தேதி மக்களவையில் எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதிக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், மக்களவையில் இன்று நடைபெறும் எஸ்.ஐ.ஆர். தொடர்பான விவாதத்தை எதிர்க்கட்சித் தரப்பில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடக்கி வைக்கவுள்ளார். இந்த விவாதம் 10 மணிநேரம் நடைபெறும் என்றும், புதன்கிழமை காலை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால் பதிலத்து பேசவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் சார்பில் கே.சி. வேணுகோபால், மணீஷ் திவாரி, வர்ஷா கெய்க்வாட், முகமது ஜவைத், உஜ்வல் ராமன் சிங், இஷா கான் செளத்ரி, மல்லு ரவி, இம்ரான் மசூத், கோவல் படவி மற்றும் ஜோதிமணி உள்ளிட்டோர் விவாதத்தில் கலந்துகொண்டு பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவாதத்தின் போது, எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் பலி, வாக்குத் திருட்டு உள்ளிட்ட விவகாரங்களை ராகுல் காந்தி எழுப்புவார் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த ஓராண்டாக, மகாராஷ்டிரம், ஹரியாணா மற்றும் கர்நாடக மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்குத் திருட்டு நடைபெற்றதாக தரவுகளை வெளியிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.