1. Home
  2. தமிழ்நாடு

அரசியலில் பரபரப்பு..! மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் : சபாநாயகர் ஏற்பு..!!

1

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை இந்தக் கூட்டத் தொடர் நடக்க இருக்கிறது. இந்தக்கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம், மத்திய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இதனிடையே மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக புதன்கிழமை மணிப்பூரில் இரண்டு பழங்குடியினப் பெண்களை நூற்றுக்கணக்கான ஆண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச்செல்லும் வீடியோ ஒன்று வெளியாக நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து.‘மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனால் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய கூட்டத்தொடரில் இதுவரை எந்த ஒரு முக்கியமான அலுவலும் நடத்த இயலாமல் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.

இந்நிலையில், பிரதமரை நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வைக்கும் வியூகமாக, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது பற்றி ‘இண்டியா’ கூட்டணி உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிப்பதில் ஒத்துழைப்பு அளிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் கார்கே உட்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கடிதம் அனுப்பியிருந்தார்.

ஆனால், எதிர்பார்க்கப்பட்டபடியே இன்று (ஜூலை 26) மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசின் மீது மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் அசாம் மாநில எம்.பி. கவுரவ் கோகோய் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருமாறு நோட்டீஸ் ஒன்றை இன்று (ஜூலை 26) காலை 9.20 மணியளவில் தாக்கல் செய்தார். அவருடன் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் மக்களவைத் தலைவர் நாகேஸ்வர் ராவும் தனியாக ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தார். பாரத் ராஷ்டிர சமிதி தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று காலை மக்களவை கூடியவுடன் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட்தால் அவை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோது, நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார். அதன் மீதான விவாதம் நேரம் குறித்து திட்டமிட்டு அறிவிக்கப்படும் என்றார். மணிப்பூர் பற்றிய விவாதங்கள் தொடங்கிய நிலையில் அவையில் பிரதமர் இருப்பது அவசியம் எனக் கூறி எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

காங்கிரஸ் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை இண்டியா கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளன. ஆனால், மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசுக்கு மக்களவையில் 332 எம்.பி.க்கள் ஆதரவு இருக்கும் சூழலில், இந்தத் தீர்மானத்தில் ஆட்சி எந்த பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like