1. Home
  2. தமிழ்நாடு

சுற்றுலா மேம்பாட்டுக்கான முக்கிய அறிவிப்புகள்..!

1

தமிழ்நாடு தனது பொருளாதார இலக்கான ஒரு டிரில்லியன் டாலர் அடைவதற்கான 18 முக்கியத் துறைகளில் ஒன்றாக சுற்றுலாத் துறையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும், தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும், தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவிப்பு வசதிச் சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.

ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கியமான இடங்களான திருவண்ணாமலை, திருச்செந்தூர், ராமேஸ்வரம், மாமல்லபுரம், கன்னியாகுமரி, பழனி, நாகூர் வேளாங்கண்ணி பகுதிகளில் சுற்றுலா தேவைகளை பூர்த்தி செய்ய, நவீன தரத்துடன் கட்டமைப்புகளை உருவாக்க ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேற்கூறிய பணிகளை சிறப்பாக செய்யும் வகையில் இந்த நகரங்களில் தனித்தனியான வளர்ச்சி ஆணையங்கள் உருவாக்குவதன் அவசியம் பரிசீலிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, மாமல்லபுரம், திருவண்ணாமலை, திருச்செந்தூர், ராமேஸ்வரத்திற்கு தனியான வளர்ச்சி ஆணையங்கள் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டின் சிறந்த, ஆனால் அதிகம் அறியப்படாத சுற்றுலா தலங்களை மேம்படுத்த 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் அந்த தலங்களில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த ஒரு திட்டமாக செயல்படும்.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் 52 ஏக்கர் பரப்பளவில் உள்ள ரேஸ் கோர்சில் ரூ. 70 கோடி மதிப்பீட்டில் ஒரு அழகிய சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இப்பூங்காவில் நறுமணப் பொருட்கள் தோட்டம், பறவைகள் காட்சிப் பகுதிகள், நகர்ப்புற வனவியல், இயற்கை வழிப்பாதைகள் போன்றவை அமைக்கப்படும்.

சுற்றுலா துறையில் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்க, சில முக்கிய சுற்றுலா வழித் தடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன:


மாமல்லபுரம்-மரக்காணம் கடலோரச் சுற்றுலா வழித்தடம்
திருச்சி-தஞ்சாவூர்-நாகை சோழர்காலச் சுற்றுலா வழித்தடம்
மதுரை-சிவகங்கை மரபுசார் சுற்றுலா வழித்தடம்
கோவை-பொள்ளாச்சி இயற்கை நலன் சுற்றுலா வழித்தடம்

இந்த வழித்தடங்களில் சுற்றுலா வளர்ச்சிக்கு, பொதுத் துறை, தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

Trending News

Latest News

You May Like