ரேஷன் கார்டுதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு - ரேஷன் குறைதீர் கூட்டம் 18ம் தேதிக்கு மாற்றம்..!

தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்தது. இந்த முகாம்கள் மூலம், ரேஷன் கடைகளில் அட்டைதாரர்களுக்கு உள்ள குறைகள் நேரடியாக கேட்டறியப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.. அந்தவகையில், தற்போதும் நவம்பர் மாதத்துக்கான ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வழக்கமாக, உணவு வழங்கல் துறை சார்பில், மண்டல உதவி கமிஷனர், வட்ட வழங்கல் அலுவலகங்களில், மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை குறைதீர் முகாம் நடத்தப்படும்..அந்தவகையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை, குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இப்போது தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால், பலரும் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். அதனால், இந்த மாதத்திற்கான ரேஷன் குறைதீர் கூட்டம், வரும் 18ம் தேதி நடத்தப்பட உள்ளதாக, உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
நவம்பர் 2023 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 18.11.2023 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.
மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.