நான் இருக்கிறேன்...கண்ணீர் வேண்டாம் தம்பி.. ஓடி வந்து உதவிய முதல்வர் ஸ்டாலின்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கீர்த்தி வர்மா. இவருக்குப் பிறவியிலிருந்து கைகள் இல்லை. மேலும் கீர்த்தி வர்மா சிறுவயதில் இருக்கும் போதே இவரது தந்தை உயிரிழந்தார். இதனையடுத்து கூலி தொழில் செய்து கீர்த்தி வர்மாவையும் குடும்பத்தையும் பார்த்து வருகிறார்.
மேலும் கீர்த்தி வர்மா தன்னுடைய தாய் உதவியுடன் அரசுப்பள்ளியில் படித்து வருகிறார்.இத்தனை நெருக்கடியில் கீர்த்தி வர்மா தன்னுடைய கல்வி படிப்பை நிறுத்தவில்லை. மேலும் மாணவனுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஊக்கமும் உற்சாகத்தையும் அளித்து வந்தனர். இந்த நிலையில் கீர்த்தி வர்மா 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தார்.
அதில் 471 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். பின்னர் இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாணவன் கீர்த்தி வர்மா,’’ பொறியியல் படித்து நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார்.மேலும் எனக்கு 2 கைகள் இல்லை. ஒரு வேலை செய்ய வேண்டும் என்றால் யாரவது உதவி செய்ய வேண்டிய நிலை உள்ளது.
தனக்குச் சொந்த வீடு இல்லை. அம்மாவிற்கும் உடல்நிலை சரியில்லை. நான் படித்து என்னைப் போன்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இதனால் தனக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய உதவ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவி செய்ய வேண்டும் என்று கண்ணீர் மல்கக் கோரிக்கை வைத்தார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி முதல்வர் ஸ்டாலின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்ணீர் வேண்டாம் தம்பி என்று கூறி,இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியனிடம் உங்களுக்கான மருத்துவச் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கச் சொல்லியிருக்கிறேன் என்று உடனடியாக பதில் தெரிவித்து இருந்தார்.