1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தை உலுக்கிய கள்ளச்சாராயம் பலி : வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்..!

1

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாகுளம் அருகே கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். சுமார் 50க்கும் அதிகமானவர்களுக்கு திடீரென்று வாந்தி, வயிற்றெரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தான் கள்ளக்குறிச்சியில் என்ன நடந்தது? என்பது பற்றியும், வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டத்தில் கருணாபுரம் காலனியை சேர்ந்த 26 நபர்கள் வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பதாக தெரிவித்து கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் மேற்கொண்ட விசாரணையின் மேற்படி நபர்கள் பாக்கெட் சாராயத்தை அருந்தியிருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் பிரவீன் குமார் (வயது 26) நேற்று அதிகாலை 3 மணியளவில் வயிற்று வலியின் காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சுரேஷ் (40), சேகர் (59) ஆகியோரும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாகவும், உடல்கள் உடல்கூறாய்விற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பின் காரணம் உடல் கூறாய்விற்கு பின்பு தெரியவரும். மேற்கண்ட நபர்களின் சுரேஷ் மற்றும் கந்தன் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்ட நிலையில் மற்ற அனைவருக்கும் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மருத்துவ கல்லூரியிலிருந்து நான்கு சிறப்பு மருத்துவர்களை கொண்ட மருத்துவ குழு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த மருத்துவக்குழு, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலிருந்தும், சிறப்பு மருததுவர் குழு கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 18 நபர்கள் அவசரகால ஊர்தியின் மூலமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 6 நபர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 12 அவசர கால ஊர்திகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தயாராக வைக்கப்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளை மேற்பார்வையிட தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் கோவிந்தராவ் மற்றும் மருத்துவ கல்வி இயக்குநர் ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளனர். மேலும் பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்கிற கண்ணுகுட்டி (49) என்பவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு விழுப்புரம் மண்டல தடய அறிவியல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் மெத்தனால் கலந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

முதலமைச்சருக்கு இந்த சம்பவம் பற்றி தகவல் தெரிவந்தவுடன் உடனடியாக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோரை உடனடியாக கள்ளகுறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்க சென்று சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத் உடனடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக எம்எஸ் பிரசாந்த் புதிய மாவட்ட ஆட்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு ரஜத் சதுர்வேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

அதன்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவை சேர்ந்த காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ் செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி, உதவி காவல் ஆய்வாளர் பராதி மற்றும் அப்பகுதி காவல் நிலை ஆய்வாளர் ஆனந்தன், உதவி காவல் ஆய்வாளர் ஷிவ்சந்திரன், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் உள்ளிட்டவர்களும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் இவ்வழக்கினை தீர விசாரிக்கவும், தக்க மேல்நடவடிக்கைக்காகவும் உடனடியாக சிபிசிஐடி வசம் ஒப்படைக்க ஆணையிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like