மஞ்சுமெல் பாய்ஸ் பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/6b63374dd6889b6dfa00f92c1ff01e03.png?width=836&height=470&resizemode=4)
மலையாளத்தில் வெளியான திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ். இந்த திரைப்படம் கேரளாவை விட, தமிழ்நாட்டில் அதிக வசூலை வாரிக் குவித்தது.
குறிப்பாக, இதற்கு முன்னதாக பரவலாக பேசப்பட்ட பிரேமம் படத்தின் வசூலை பின்னுக்குத் தள்ளியது மஞ்சுமெல் பாய்ஸ். இதற்கு முக்கிய காரணமாக, அப்படத்தில் 1991ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குணா படத்தில் இடம்பெற்று இருந்த 'கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே..' என்ற பாடல் பயன்படுத்தி இருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதனால் தமிழகத்தில் கிராமப்புறங்கள் உட்பட மெட்ரோ நகரங்களிலும் நல்ல வெற்றியைப் பெற்றது எனலாம். இப்படத்தை பரவா பிலிம்ஸ் சார்பில் சவுபின் சாகிர், ஜான் ஆண்டனி மற்றும் பாபு சாகிர் ஆகியோர் தயாரித்திருந்தனர். மேலும், சவுபின் ஷாகிர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, மஞ்சுமெல் பாய்ஸ் பட தயாரிப்பாளருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இவ்வாறு இளையராஜா அனுப்பியுள்ள நோட்டீஸில், "குணா படத்தில் இடம்பெற்றுள்ள கண்மணி அன்போடு என்னும் பாடலை உருவாக்கியவர் என்ற முறையில், பதிப்புரிமைச் சட்டத்தின்படி அதன் முழு உரிமையாளர் நான்தான்.
எனவே, என்னிடம் முழு அனுமதி பெற்று இந்த பாடலை பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை என்பதால், இந்த பாடலை உடனடியாக படத்தில் இருந்து நீக்க வேண்டும் அல்லது பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீடை வழங்க வேண்டும்.
இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால், பதிப்புரிமையை வேண்டுமென்றே மீறியதாக கருதி, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என தெரிவித்துள்ளார்.
சமீப காலங்களாக இளையராஜா தனது பாடல்களின் பதிப்புரிமையில் முழுக் கவனம் செலுத்தி வருகிறார். அதிலும், கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தின் டைட்டில் டீசர் வெளியானபோது, அதில் தன்னுடைய பாடல் இடம் பெற்றிருந்ததற்கு தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.