இன்று விரதம் இருந்தால் திருமண வரம் கைகூடும். வேண்டும் வரம் கிடைக்கும்..!
இந்தப் பிரபஞ்சத்தின் குருவாகத் திகழ்பவர் சிவபெருமான். அந்த சிவபெருமானுக்கே குருவாக விளங்கி 'தகப்பன் சாமி' எனத் திகழ்ந்து குருவுக்கே குருவாக விளங்கியே பேறு பெற்றவர் முருகப்பெருமான்.
பொதுவாக நம் நாட்டில் பௌர்ணமி நாள் எல்லாம் விழாகாலமாகவே திகழும். அவ்வாறு வைகாசி மாதம் வரும் பௌர்ணமி நாளே வைகாசி விசாகம் என்று கொண்டாடப்படும். முருகப்பெருமானோடு தொடர்புடைய நட்சத்திரங்கள் மூன்று. அவை: விசாகம், கார்த்திகை, உத்திரம். இவை முறையே வைகாசி, கார்த்திகை, பங்குனி ஆகிய மாதங்களில் முழுநிலவு நாளை ஒட்டியே வரும். இந்த மூன்றுமே முருகனை வழிபட உகந்த திருநாள்களாகும்.
மனம் முழுமையும் இருள் இன்றி பூரணமான ஒளியோடு திகழ வேண்டும் என்றால் பௌர்ணமி நாளில் வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். அதிலும் முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாக தினத்தில் அவனை வழிபட்டால் மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்தொளி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வைகாசி விசாகம் வழிபடுவது எப்படி?
இந்த ஆண்டு வைகாசி விசாகம் இன்று கொண்டாடப்படுறது. முருகப்பெருமான் ஆலயங்களில் கடந்த பத்து நாள்களாக உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் சுமந்தும் முருகப்பெருமானை வழிபடுவார்கள். இந்த நாளில் ஆலயம் சென்று வழிபாடு செய்வது மிகவும் விசேஷம். இயலாதவர்கள் தங்கள் வீட்டிலேயே முருகப்பெருமானின் படத்தை வைத்து வழிபடலாம்.
இன்று நீராடி திருநீறு அணிந்து முருகப்பெருமானைத் துதிக்க வேண்டும். முருகனுக்கு செவ்வரளி, செம்பருத்தி முதலிய செந்நிற மலர்களை சாத்தி வழிபடுவது விசேஷம். சிலர் நாள் முழுவதும் உண்ணா நோன்பும் மேற்கொண்டும் வழிபடுவார்கள். முருகப்பெருமானுக்குரிய திருப்புகழ், கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம், வேல்மாறல் பாராயணம் போன்ற தோத்திரங்களை நாள் முழுவதும் சொல்லி வழிபட வேண்டும்.
விஸாகம் ஸர்வ பூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகா ஸுதம்!
ஸதா பாலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்!
இதன் கருத்து விசாக நட்சத்திரத்தில் அவதரித்தவரும், உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமாகத் திகழ்பவரும், கிருத்திகா தேவிகளால் வளர்க்கப்பட்டவரும், எப்போதும் குழந்தை வடிவானவரும், ஜடை தரித்துள்ளவரும், பரமேஸ்வரனது குமாரருமான ஸ்ரீகந்தனை வணங்குகிறேன் என்பதாகும்.
பொதுவாக வைகாசி விசாக தினத்தன்று வழிபாடுகள் செய்தால் செய்தால் பகை நீங்கும். பாவங்கள் விலகும். முன்வினைப் பயன்கள் நீங்கும். திருமண வரம் கைகூடும். வேண்டும் வரம் கிடைக்கும். காரியத்தடைகள் நீங்கி வெற்றிகள் குவியும் என்பது நம்பிக்கை. எனவே அனைவரும் தவறாமல் இன்று முருகப்பெருமானை வழிபட்டு சகல வரங்களையும் பெறுவோம்.