1. Home
  2. தமிழ்நாடு

தேர்வு செய்யப்பட்ட அணி உங்களுக்கு புடிக்கவில்லை என்றால் போட்டிகளை பார்க்காதீங்க..!

1

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. இந்ததொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் இருந்தே உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் லெக் ஸ்பின்னர் யுவேந்திர சாஹல் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு பதிலாக ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் இடம் பெற்றுள்ளார். சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் தேர்வாகி உள்ளனர். இந்நிலையில், சீனியர் ஆஃப்-ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்வு செய்திருக்க வேண்டும். அவர், பின்கள பேட்டிங் வரிசையில் பயனுள்ளதாக இருப்பார் என சில முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியதாவது:

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுவிட்டது. அதனால் இனி அஸ்வின் பற்றி பேசவேண்டாம். சர்ச்சைகள் உருவாக்குவதை நிறுத்துங்கள். இதுதான் தற்போது இந்திய அணி. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், போட்டிகளை பார்க்காதீர்கள். ஆனால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது வேறு ஒருவர் இருக்க வேண்டும் என்று சொல்வதை நிறுத்துங்கள், இது தவறான எண்ணம்.

கே.எல்.ராகுலின் காயம் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். ஆசிய கோப்பையை வெல்வது முக்கியம்தான். ஆனால் இலக்கு உலகக் கோப்பைதான். இந்திய அணி நிர்வாகம் உலகக் கோப்பை தொடருக்கு கே.எல்.ராகுல் தேவை என்று விரும்பினால், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ள போதிலும் ஆசிய கோப்பை தொடருக்கு தேர்வு செய்தது சரி என்றே கருதுகிறேன்.

இந்திய அணியை பொறுத்த வரையில் ஆசிய கோப்பை தொடருக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. கே.எல்.ராகுல் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கு இந்த அவகாசம் போதுமானது. மேலும் செப்டம்பர் நடுப்பகுதி வரை இந்திய கிரிக்கெட் அணி அதிக அளவிலான போட்டிகளில் விளையாட உள்ளது. கடந்த காலங்களில் இந்திய அணிக்காக சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி உள்ள கே.எல்.ராகுல், காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்பை வழங்குவது நியாயமானது என்றே நினைக்கிறேன்.

ஆசிய கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி சிறந்ததாகவே திகழ்கிறது. இந்த அணியில் இருந்துதான் உலகக் கோப்பைக்கான 15 பேர் தேர்வு இருக்க வேண்டும். இந்தியாவுக்காக விளையாடும்போது ஒவ்வொரு போட்டியும் முக்கியம். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற எப்போதும் பாடுபட வேண்டும்.இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றால், மிகவும் நல்லது. ஆனால் உலகக் கோப்பையை வெல்வதே இலக்காக இருக்க வேண்டும்.

இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

Trending News

Latest News

You May Like