ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால். புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/b2e80bafb726e5aac4510f32b95ad58a.webp?width=836&height=470&resizemode=4)
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், “தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து நவம்பர் 09- ஆம் தேதி முதல் நவம்பர் 11- ஆம் தேதி வரை 10,975 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படும் 6,300 பேருந்துகளுடன் கூடுதலாக 4,675 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
தீபாவளி சிறப்புப் பேருந்துகள் மூலம் சுமார் 6 லட்சம் பேர் பயணிக்க போக்குவரத்துத்துறை ஏற்பாடு செய்துள்ளது. கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இருந்து 5,920 பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளி முடிந்து சொந்த ஊர்களில் இருந்து திரும்ப ஏதுவாக நவம்பர் 13 முதல் நவம்பர் 15- ஆம் தேதி வரை 9,467 பேருந்துகள் இயக்கப்படும்.
தீபாவளி பண்டிகையையொட்டி, இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க முன்பதிவுத் தொடங்கப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்கள், தாம்பரம் மெப்ஸில் ஒரு முன்பதிவு இயக்கப்படும். மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.
ஆயுதப்பூஜை விடுமுறைக்கு பேருந்துகள் இயக்கியதற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் பாராட்டுகள் வந்தன. ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800- 425- 6151 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம். சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக, புகார் தெரிவிக்க 94450-14450, 94450-14436 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.