திரவுபதி அம்மன் கோவிலை திறக்கவில்லை என்றால் ஆலய நுழைவு போராட்டம் நடத்தப்படும் - சீமான்..!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் மூடப்பட்டிருந்த திரவுபதி அம்மன் கோவிலை திறந்து, பொதுமக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, ஓராண்டுக்கு மேல் ஆகிறது.
ஆனால், தமிழக அரசு, அனுமதி மறுத்து வருகிறது. தினமும் காலை 6:00 முதல் 7:00 மணி வரை வழிபட, கோவில் திறக்கப்படுவதாக அரசு தெரிவிப்பது பொய்.
மக்களிடையே கருத்து வேறுபாடு இருந்தால், இரு தரப்பு மக்களையும் அழைத்துப் பேசி ஒற்றுமைப்படுத்தி, நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, வழிபாடு நடத்துவதே நல்ல அரசின் கடமை.
அதை விடுத்து, 'மக்களிடையே கலவரம் ஏற்படும், சட்டம் - ஒழுங்கு சீர்குலையும்' என்றெல்லாம் காரணங்களைக் கூறி, கோவிலை திறக்க மறுப்பது, எதேச்சாதிகாரத்தின் உச்சம்.
மாணவர் வருகை குறைந்தால் பள்ளிக்கூடத்தை மூடுவது, வழிபாட்டில் சிக்கல் என்றால் கோவிலை மூடுவதுதான், திராவிடம் கட்டிக்காத்த சமத்துவமா; பெற்றுத் தந்த சமூக நீதியா?
தி.மு.க., அரசின் போலி சமூக நீதி முகத்திரையை கிழித்து, உண்மையான சமத்துவத்தை நிலைநாட்ட, தமிழ் இயக்கங்களை ஒன்றிணைத்து, மேல்பாதி மக்களுடன், விரைவில் ஆலய நுழைவு போராட்டத்தை, நா.த.க., முன்னெடுக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.