மீண்டும் அமெரிக்க உளவு விமானம் ஊடுருவினால் சுட்டு வீழ்த்துவோம்: வட கொரியா..!

அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. அமெரிக்காவின் எச்சரிக்கைகளை மீறி வட கொரியா தொடர் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தங்களது வான்வெளிக்குள் அமெரிக்க உளவு விமானம் அத்துமீறி நுழைந்ததாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், வடகொரியாவின் கிழக்கு வான்வெளியில் அமெரிக்க உளவு விமானம் இரண்டு முறை அத்துமீறி நுழைந்தது.மீண்டும் அமெரிக்க உளவு விமானம் ஊடுருவினால் கடும் விளைவைச் சந்திக்கும் என்று எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து வட கொரிய தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், எங்களது வான்வெளியில் அத்துமீறி நுழையும் அமெரிக்க உளவு விமானத்தைச் சுட்டு வீழ்த்துவோம். இதுபோன்ற சம்பவம் கிழக்கு கடலில் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கடந்த காலங்களில் அமெரிக்க விமானங்களைச் சுட்டு வீழ்த்திய சம்பவங்களை நினைவுபடுத்துகிறோம். அமெரிக்காவால் வெறித்தனமாக அரங்கேற்றப்பட்ட வான் உளவு செயல்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.