தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்..!

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள உத்தரவில், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையராக கலை அரசி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக கதர் கிராமத் தொழில் வாரிய தலைமைச் செயல் அலுவலராக சம்பத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நில நிர்வாகம், நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி இயக்குநராக மகேஸ்வரி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநராக ஜான் லூயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் அரசு சிறப்புச் செயலாளர் பொறுப்பு சரவண வேல்ராஜுக்கு வழங்கப்பட்டுள்ளது. புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநராக மோகனும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குநராக சிவராசுவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல தமிழக நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக ராஜேந்திர ரத்னுவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனமான சிப்காட்டின் செயல் இயக்குநராக கேத்தரின் சரண்யா நியமிக்கப்பட்டுள்ளார்.