"ஊரடங்கு நேரத்தில் பிரதமரே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்" : சிங்கப்பெண் போலீஸ்!
குஜராத்தில் ஊரடங்கை மீறி இரவு நேரத்தில் வெளியே வந்த பாஜக அமைச்சரின் மகனிடம் பெண் காவலர் ஆவேசமாக பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த சுனிதா, இரவு நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி காரில் வந்த சில இளைஞர்களை தடுத்து நிறுத்தினார். அவர்கள் காவலர் சுனிதாவுடன் வாக்குவாதம் செய்துவிட்டு, பின்னர் குஜராத் மாநில சுகாதாரத்துறை துணை அமைச்சரும், பாஜகவை சேர்ந்தவருமான குமார் கானானியின் மகன் பிரகாஷை போன் செய்து வரவழைத்தனர். பிரகாஷ் வந்து தனது நண்பர்களை உடனே விடுவிக்குமாறு கூற, சுனிதா மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவதாம் ஏற்பட, ஆவேசமடைந்த காவலர் சுனிதா, ஊரடங்கு நேரத்தில் உங்களை வீட்டை விட்டு வெளியே செல்ல அதிகாரம் அளித்தது யார் ? ஊரடங்கை மீறி பிரதமர் மோடியே வந்தாலும் நான் தடுத்து நிறுத்துவேன். இரவு முழுவதும் காவல் காக்கும் போலீஸ் என்ன முட்டாளா என்று சீறினார்.
இதில் ஆத்திரமடைந்த அமைச்சர் மகன், நான் நினைத்தால் உன்னை இந்த இடத்திலேயே ஒரு வருடம் நிற்க வைப்பேன் என எச்சரித்துள்ளார். அவர்கள் பேசிய வாக்குவாதம் முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நெட்டிசன்கள் அமைச்சர் மகனுக்கு கண்டனங்களையும், தனி ஒரு பெண்ணாக அமைச்சர் மகன் என்றாலும் எதிர்த்து நின்ற காவலர் சுனிதாவுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்துக்குப் பின்னர் சுனிதா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் பணியை ராஜினாமா செய்துள்ளார். அவரிடம் குஜராத் காவல்துறை கட்டாயம் செய்து ராஜினாமா கடிதத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
Here is the video of arguments by Lady cop and Gujarat Health Minister Kumar Kanani's son Prakashpic.twitter.com/TN7bxoabLX
— Mohammed Zubair (@zoo_bear) July 12, 2020