1. Home
  2. தமிழ்நாடு

நீட் தேர்வை 3 பிரச்சினைகளாக நான் பார்க்கிறேன் - தவெக தலைவர் விஜய்..!

W

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி துவங்கி 2026 சட்டப் பேரவைத் தேர்தலை இலக்காக கொண்டுள்ளார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விருது, கல்வி ஊக்கத் தொகை வழங்கி கவுரவித்து வருகிறார்.
கடந்த மாதம் 28ம் தேதி முதல்கட்டமாக சென்னை திருவான்மியூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் 127 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விருது, ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக இன்று 19 மாவட்டங்களைச் சேர்ந்த 107 தொகுதிகளைச் சேர்ந்த 642 மாணவ, மாணவிகளுக்கு இன்று, விருது மற்றும் கல்வி ஊக்கத் தொகைகளை தவெக தலைவர் விஜய் வழங்க உள்ளார். இதையொட்டி அவர் இன்று அதிகாலையிலேயே விழா நடைபெறும் மண்டபத்திற்கு வருகை தந்தார்.
அங்கு பேசிய அவர், நீட் விலக்கு பற்றிய தமிழக அரசின் தீர்மானத்தை வரவேற்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவ, மாணவிகள்... குறிப்பாக கிராமப் புறத்தைச் சேர்ந் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே சத்தியமான உண்மை.
நீட் தேர்வை 3 பிரச்சினைகளாக நான் பார்க்கிறேன். ஒன்று- இந்த நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது. 1975-க்கு முன்பு கல்வி மாநிலப் பட்டியலில் தான் இருந்தது. அதன் பிறகு அதை பொதுப்பட்டியலில் சேர்த்தனர். அப்போதுதான் முதல் பிரச்சினை தொடங்கியது.
இரண்டாவது- ஒரே நாடு, ஒரே பாடத்திட்டங்கள், ஒரே தேர்வு... இது கல்வி கற்கும் நோக்கத்திற்கே எதிரான விஷயம். பாடத்திட்டங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.
பன்முகத்தன்மை பலமே தவிர பலவீனம் அல்ல. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு, என்சிஇஆர்டி-பாடத்திட்டத்தில் தேர்வு வைத்தால் அதை எப்படி? கிராமப்புற மாணவ மாணவிகள், குறிப்பாக மருத்துவ படிப்பில் இது அவர்களுக்கு எவ்வளவு சிரமமான விஷயம் என்பதை யோசித்து பார்க்க வேண்டும்.
மூன்றாவதாக நான் பார்க்கும் பிரச்சினை- கடந்த மே 5ம் தேதி நடந்த நீட் தேர்வில் குளறுபடிகள் நடந்ததை நாம் செய்திகளில் பார்த்தோம். இதன் காரணமாக நீட் தேர்வு மீது உள்ள நம்பகத்தன்மையே மக்களுக்கு முற்றிலும் போய்விட்டது. இனி நாடு முழுவதும் நீட் தேர்வே தேவையில்லை என்பதே இந்த செய்திகள் மூலமாக நாம் புரிந்து கொண்ட விஷயம். இதற்கு நீட் விலக்குதான் உடனடி தீர்வு.
நீட் ரத்து கோரி, தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஒன்றிய அரசு விரைவில் இப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.

Trending News

Latest News

You May Like