இதை எதிர்பார்க்கல..! ஹெலிகாப்டர் செலவுக்கு பேரிடர் நிதியில் இருந்து ₹153 கோடியை பிடித்தம் செய்த ஒன்றிய அரசு!
கேரளாவில் மழைக்கு பஞ்சமே இருக்காது. ஆனால் இதே மழைதான் 350க்கும் அதிகமான உயிர்களை பலிவாங்கியுள்ளது. வயநாடு பகுதியில் கடந்த ஜூலை இறுதியில் கனமழை பதிவாகியிருந்தது. வழக்கமாக பெய்யும் மழையை விட 10% கூடுதலாக மழை பதிவாகியிருந்தது. இதனால், வைத்திரி தாலுகாவுக்கு உட்பட்டுள்ள மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.
இங்கு உள்ள மலை முழுக்க முழுக்க மண்ணால்தான் உருவாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது மலையில் உள்ள மண்ணின் அளவு சுமார் 3-4 மீட்டர் வரை இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனவே, அதிக மழை நிலச்சரிவை ஏற்படுத்த காரணமாக இருந்திருக்கிறது. நிலச்சரிவு புஞ்சிரிமட்டம், முண்டக்கை , சூரல்மலை மற்றும் வெள்ளரிமலை என 4 கிராமங்களை உரு தெரியாமல் அழித்திருக்கிறது. மொத்த கிராமங்களும் மண்ணுக்கு அடியில் புதைந்தன.
அதிகாலை நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால், இப்படியொரு சம்பவம் நடந்தது என்பது தெரியவே சில மணி நேரங்கள் வரை ஆகிவிட்டது. மறுபுறம் இந்த கிராமங்களை இணைக்கும் சாலைகளும் மண், ராட்சத கற்றளால் மூடப்பட்டதால் மீட்பு பணிகளில் தொடர் தொய்வுகள் ஏற்பட்டன. எனவே வேறு வழியின்றி வான் வழியில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. மீட்பு பணிகளில் ஏற்பட்ட தொய்வு காரணமாக உயிரிழப்புகள் தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது.
இந்த நிலச்சரிவு ஏராளமான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது என்றும், மீட்பு பணிகள் மற்றும் நிவாரணத்திற்கு கூடுதல் நிதி தேவைப்படும் என்பதால் மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கும் பேரிடர் நிவாரண நிதியை அதிகரித்து வழங்க வேண்டும் என்று கேரள அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் அப்படி எந்த கூடுதல் நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை. மட்டுமல்லாது ஆண்டு தோறும் வழங்கும் நிதியிலிருந்து ரூ.153.47 கோடியையும் பிடித்தம் செய்திருக்கிறது.
மீட்பு பணிகளுக்கு ராணுவ ஹெலிகாப்படர் பயன்படுத்தியதற்காக இந்த தொகை பிடித்தம் செய்யப்படுவதாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு கேரள அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது
.png)