நிஜத்தில் வாழ முடியவில்லை... இறப்பிலாவது சேருவோம்... காதலி தற்கொலை..!

தருமபுரி மோளையானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அகில் பிரியா (20). இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருந்துக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கும், அவரது உறவினரான கட்டரசம்பட்டியைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இதனால் அவர்கள் தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.
தீபாவளிக்கு அகில் பிரியா, தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் பண்டிகை முடித்துவிட்டு கோயம்புத்தூர் செல்வதற்காக கடந்த 14-ம் தேதி சென்றுள்ளார். அப்போது தன் காதலனைச் சந்திப்பதற்காக போன் செய்து சேலம் வரச் சொல்லியிருந்திருக்கிறார். இதனால் ஸ்டாலின் தனது இருசக்கர வாகனத்தில் கோயம்புத்தூரில் இருந்து சேலத்திற்கு வந்திருக்கிறார்.
சேலம் அயோத்தியபட்டினம் ராமர் கோயில் அருகே வரும் போது விபத்தில் சிக்கி ஸ்டாலின், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையறிந்த அகில்பிரியா சோகத்துடன் வீட்டில் இருந்துள்ளார். தன்னைப் பார்க்க வந்த காதலன் விபத்தில் இறந்த சோகத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்த அவர் நேற்று விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார்.
அவரை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குடும்பத்தினர் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அகில் பிரியா உயிரிழந்துள்ளார். இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.