பரோட்டா சால்னாவில் மனித பல்...! ஹோட்டல் உரிமையாளரின் பதிலை கேட்டு அதிர்ந்த உணவுத்துறை அதிகாரிகள்..!

சேலம் மாவட்டம் 5 ரோடு சந்திப்பு அருகே அசோக் ஹோட்டல் என்கிற பெயரில் ராமசுப்பு என்பவர் அசைவ உணவகம் நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் நேற்று சேலம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நாகராஜ் சாப்பிட பரோட்டா ஆர்டர் செய்து காத்திருந்தார்.
அவருக்கு பரோட்டாவுக்கு கொடுக்கப்பட்டிருந்த சிக்கன் சால்னாவில் மனித கடவாய்ப் பல் ஒன்று இருந்ததாக கூறி கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற அதிகாரிகள் உணவில் கிடந்ததாக கூறப்பட்ட பல்லை கைப்பற்றி பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து விட்டு, சம்பந்தப்பட்ட உணவகத்தில் உணவு விற்பனையை தற்காலிகமாக நிறுத்தினர்.
இந்நிலையில் நாகராஜிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவிற்கு கிரேவி ஏதும் வழங்கப்படாத நிலையில் , அவருடைய நண்பர்கள் கிரேவியில் பல் கிடந்ததாக கூறி கடை உரிமையாளரிடம் ரூ.20,000 கேட்டு மிரட்டியதாக ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் பணம் தர மறுத்ததால் உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறையை அழைத்ததாகவும் ஹோட்டல் உரிமையாளர் புகார் கூறினார்.
இந்த கும்பல் இது போன்று பல கடைகளில் உணவில் பூச்சி கிடப்பதாகவும், புழு கிடப்பதாகவும் பொய்யாக கூறி உணவக உரிமையாளர்களை மிரட்டி பணம் பறித்து வருவதாக புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.