1. Home
  2. தமிழ்நாடு

கோவை அருகே தனியார் நிறுவனத்திற்குள் கிடந்த மனித கை..!

1

கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தின் ஸ்டோர் அறைக்கு அருகே துண்டிக்கப்பட்ட மனித வலது கை ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளன. கள்ளபாளையத்தில் சுதாகர் என்பவருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தின் ஸ்டோர் அறை அருகே மனித கை கிடப்பதாக நிறுவன மேலாளர் வைரவநாதன், உரிமையாளரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சுதாகர், உடனடியாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

சம்பவ இடத்திற்கு விரைந்த சூலூர் காவல்துறையினர், ஸ்டோர் அறை அருகே கண்டெடுக்கப்பட்ட கை யாருடையது மற்றும் அது அங்கு வந்த சூழல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த கை திருப்பூரைச் சேர்ந்த அழகுபாண்டி உடையது என்பது தெரியவந்தது. அழகுபாண்டி, மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, தண்டவாளத்தில் சென்று நின்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அவரது வலது கை துண்டாகி, கால்களும் பலத்த காயமடைந்தன. தற்போது அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், அழகுபாண்டியின் துண்டிக்கப்பட்ட கை மற்றும் சிதைந்த கால்கள் அகற்றப்பட பின் உயிரியல் மருத்துவக் கழிவு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கிருந்த ஒரு நாய் அவரது கையை எடுத்து, அருகிலிருந்த சுதாகரின் நிறுவன வளாகத்தில் போட்டுவிட்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் கள்ளபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like