வெறும் 2 மணி நேரத்தில் திக்கான தயிர் செய்வது எப்படி?

கடைகளில் வாங்கும் தயிர் பல சமயங்களில் அதிக புளிப்புடனும் ஃபிரஷ்ஷாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் வீட்டிலேயே கீழ்வரும் வழிகளில் தயிர் செய்து வைத்துக் கொண்டால் ஃபிரஷ்ஷாகவும் இருக்கும். செலவும் குறைவு. மோர், லஸ்ஸி, ஸ்மூத்தி என எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். மிகச்சிறந்த ப்ரோ - பயோடிக் உணவாக அது இருக்கும்.
கெட்டியான தயிர் செய்ய தேவையான பொருள்கள்
- ஒரு லிட்டர் பால்
- ஒரு கப் பால் பவுடர்
- 1 கப் தயிர் (உறைமோர்),
தயிர் தயாரிக்க பாலை சூடாக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும் . ஆனால் பாலை கேஸில் வைப்பதற்கு முன், அதில் பால் பவுடரைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
இது பாலை கெட்டியாக்கி, கிரீமியாக மாற்றும்.
கட்டிகள் எதுவும் இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் ஒரு விஸ்க் வைத்து கலந்து விடுங்கள்.
இப்போது இரண்டு முறை கொதிக்கும் வரை மிதமன தீயில் வைத்து பாலைக் காய்ச்சுங்கள்.
நன்கு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.
நிறைய பேர் தயிர் செய்யும்போது பண்ணுகிற தவறு இதுதான். பாலை காய்ச்சிய பிறகு முழுமையாக குளிர்ச்சியாக்கி விடுவது. அது தவறு.
பால் முழுவதும் குளிர்ச்சி அடையாமல் வெதுவெதுப்பான நிலையில் இருக்கும்போது (விரல் பொறுக்கும் சூடு) உறைமோர் ஊற்ற வேண்டும். உறைமோரும் அதிக புளிப்பும் தண்ணீரும் இல்லாமல் இருக்க வேண்டும்.
சில நிமிடங்களில் லேசான நுரை லேயராக உருவாக ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் அதை வேறொரு பாத்திரத்திற்கோ அல்லது சிறிய சைஸ் மண் பாத்திரத்திற்கோ மாற்றிக் கொள்ளுங்கள். அந்த பாத்திரத்தை மெல்லிய காட்டன் துணி அல்லது அலுமினியம் ஃபாயில் பேப்பர் கொண்டு மூடவும்.
ஒரு அகலமான சற்று பெரிய பாத்திரத்தை அடுப்பில் நேரடியாக வைத்தோ அல்லது தோசைக்கல் மீது வைத்தோ சூடாக்குங்கள். அல்லது குக்கரை கூட பயன்படுத்தலாம்.
அப்படி சூடாக இருக்கும் பாத்திரங்களுக்குள் நீங்கள் காய்ச்சி ஊற்றி தயிருக்கு ரெடியாக வைத்திருக்கும் பாத்திரத்தை உள்ளே வைத்து விடுங்கள்.
மேலே உள்ள பெரிய பாத்திரத்தை மூடி வைத்து விடுங்கள். உங்களுடைய தயிர் 2 மணி நேரத்தில் ஐஸ் க்ரீம் போல கிரீமியாக ரெடியாகிவிடும்.