கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து இயக்க வேண்டுமென்று திடீரென சொன்னால் எப்படி செய்ய முடியும்?

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க, தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உத்தரவிட்டிருந்தார். உத்தரவை நிராகரித்துள்ள ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம், கோயம்பேட்டில் இருந்து தான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாவது, “எங்கள் மீது அரசு வழக்கு போட்டால் நீதிமன்றம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை; கோயம்பேட்டில் இருந்து மட்டுமே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து இயக்க வேண்டுமென்று திடீரென சொன்னால் எப்படி செய்ய முடியும்? 1,000 ஆம்னி பேருந்துகள் உள்ள நிலையில் கிளாம்பாக்கத்தில் 144 பேருந்துகள் மட்டுமே நிறுத்த முடியும். கடந்த 2002- ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளது.